பேர்ணாம்பட்டு பகுதியில் தொடரும் இரவு நேர தொடர் மின்வெட்டு!மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்!! – பொதுமக்கள் கோரிக்கை!!
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இரவு நேர மின்வெட்டால் குடிநீர் விநியோகம், வீட்டு உபயோகப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பேர்ணாம்பட்டு பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய மக்கள் மனிதநேய கழக மாநில செயலாளர் அங்காளன் கூறுகையில், “பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது மின்சாரத்துறையின் முக்கிய பொறுப்பாகும். தொடர்ந்து இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்றார்.
மேலும், மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதுடன், சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோரிக்கை
பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் அல்லது மெத்தனம் காட்டியதாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து உரிய துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறு அல்லது கடமை தவறுதல் உறுதி செய்யப்பட்டால், நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகள் மற்றும் சட்டத்தின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மின்வெட்டு தொடர்பான புகார்களை பதிவு செய்து, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டு, பேர்ணாம்பட்டு பகுதிகளில் நிலவி வரும் இரவு நேர தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக