ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம்!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் மற்றும் துணைமுதல்வர் குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முழுக்க முழுக்க மாணவர்களே முன்னின்று நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற நடுவர், தமுஎகச மாவட்ட செயலாளர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கலந்துகொண்டார். நிகழ்வில் சிங்கப்பூர் கவிஞர் இன்பா எழுதிய ”ஒரு மேகம் வரைந்து தருவாயா” என்ற இளையோருக்கான நூலிலிருந்து பதின்மூன்று கதைகளை மாணவர்கள் எம்.ஸ்ரீநாத், வி.தேவதர்சன், ச. கன்யா, ர.அகல்யா, பி.கவினேஷ், ஜெ. அதியன், எஸ். அஸ்மிட்டா ரிபானா, என்.தாண்யஸ்ரீ, ஜெ.யாழினி, ரா.அபூர்வாஸ்ரீ, லா.வெரோனிகா, வெ.சஷ்டிகா, ஜி. ஜெய்கிருத்திக் ஆகியோர் வாசித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். புதுமையான இந்த நிகழ்வினால் ஈர்க்கப்பட்ட ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அ. தர்மசேகர் மாணவர்களின் உரைகளை முழுமையாகக் கேட்டு மாணவர்களைப் பாராட்டினார்.
சிறப்பு விருந்தினர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி பேசும்போது ”இங்கே பேசிய மாணவர்களைப் பார்க்கின்றபோது நமது பள்ளிக்கால நினைவுகள் வந்துவிட்டது. அதுவும் எல்லா மாணவர்களும் கதைகளை நன்றாக உள்வாங்கி வெளிப்படுத்தி சிங்கப்பூரை நம் கண்முன் நிறுத்தி விட்டார்கள். எதிர்காலத்தில் சிறந்த கதைசொல்லிகளாக இவர்கள் பேசப்படுவார்கள். பெரும்பாலும் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்தாலே மிரளுவார்கள். இங்கே நடைபெறுகிற ”புத்தகமில்லா தின” கொண்டாட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களோடு ஒன்றாய்க் கலந்து பாட்டு, கதை, நடனம், விளையாட்டு என மிகுந்த மகிழ்வோடு இந்த நாளை நடத்துகிறார்கள். ஒரு பள்ளியை இப்படி கலகலப்பாக நடத்திடமுடியும் என்பதை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் இயக்குனர் ரா.சுதர்சன் இவர்களைப் பார்த்து பிரமித்துப்போனேன். புதிதாகப் பொறுப்பேற்ற வாசிப்போர்மன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.” என்று பேசினார். நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. வாசிப்போர் மன்ற வழிகாட்டி காசாவயல் கண்ணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். முன்னதாக மாணவி அகல்யா வரவேற்க, நிறைவாக மாணவர் மோகித் கிஷோர் நன்றி கூறினார். நிகழ்வை மாணவர் அ.அ. அதியன் தொகுத்து வழங்கினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக