ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்முதல் நாள் பள்ளிக்கு வந்த மழலைக் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து ஆரத்தியெடுத்து வரவேற்பு!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகள் மாலை அணிவித்து ஆரத்தியெடுத்து வரவேற்கப்பட்டனர்.
வாழைமரம் கட்டி, வண்ண வண்ண பலூன் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க திருவிழாக்கோலம் பூண்டிருந்தது பள்ளி வளாகம்.
கோடை விடுமுறைக்குப் பின் முதல் நாள் பள்ளிக்கு வரும் மழலைக் குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் இயக்குனர் ரா. சுதர்சன் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பள்ளிக்கு வந்த எல்.கே.ஜி குழந்தைகளே சிறப்பு விருந்தினர்களாக மாறி ரிப்பன் வெட்டி வகுப்புகளைத் தொடக்கி வைத்தனர்.
கல்வியாண்டின் முதல் நாள் என்பதால் பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து வகுப்பறை வாசலில் விட்டுச் சென்றனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் வரிசையில் நின்று கைகூப்பி வரவேற்றதோடு, இனிப்புகளும் பலூன்களும் வழங்கி வகுப்புக்கு அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு வகுப்பறையும் விதவிதமாய் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது. ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி கல்விப் பயணத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற காட்சியைக் கண்ட பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு பள்ளி நிர்வாகத்துக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
”ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மீது ஏராளம் கனவுகளை வைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுகளுக்கு வடிவம் கொடுத்து நனவாக்கி மாணவர்களை சிறந்த குடிமகனாக உருவாக்குவதே எமது பள்ளியின் நோக்கம்” என்றார் தேசிய விருது பெற்ற பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி.
பள்ளி துவங்கிய முதல் நாள் நிகழ்வை பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, சி.எஸ். ரம்யா, மேலாளர் ராஜா, மற்றும் கமல்ராஜ், உதயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக