"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன!!
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தும் ரகசியத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படைப் பொறுப்புகளில் இருந்து விலகி, இளைஞர்களை மையப்படுத்திய புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க உள்ளார்.
டெல்லி மேலிடத்தின் முழு ஒப்புதலுடன், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பச்சைக்கொடியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த 'பிளாக்பஸ்டர்' வெற்றி பாரம்பரிய அரசியல் கட்சிகளின் கணக்குகளை மாற்றியமைத்துள்ளது. இந்தச் சூழலில், பாஜகவுக்குள் இருந்தபடியே தமிழ்நாட்டு இளைஞர்களின் முழு ஆதரவைப் பெற முடியாது என்பதை உணர்ந்த அண்ணாமலை, தனிப்பாதையில் செல்ல முடிவு செய்துள்ளார்.
அண்ணாமலையின் சொந்த அமைப்பான 'வி தி லீடர்ஸ்' (We The Leaders) உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் பிரம்மாண்ட இளைஞர் இயக்கம் தொடங்கப்படவுள்ளது. இது முதலில் ஒரு சமூக இயக்கமாகத் தொடங்கினாலும், பின்னர் வலுவான அரசியல் கட்சியாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் மறுக்கப்பட்ட பின்னணியில் இந்த 'மாஸ்டர் பிளான்' இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்குள் மட்டும் முடங்குவதற்குப் பதிலாக, மாநில அளவில் புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்த அவருக்கு டெல்லி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அமித் ஷா தலைமையிலான பாஜக மேலிடம், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு நீண்டகால மாற்றாக ஒரு வலுவான அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்கு அண்ணாமலை பாணியிலான தனித்துவமான பிராந்திய முகம் தேவை என்பதை டெல்லி ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே தேசியப் பாதையைத் தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, அண்ணாமலை தனியாகக் களம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில மத்திய அரசு திட்டங்களுக்கு அண்ணாமலை தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளியானது. இது மோதலாகக் கருதப்பட்டாலும், உண்மையில் தமிழ்நாட்டின் பிராந்திய உணர்வுகளுக்கு ஏற்ப அவரை முன்னிறுத்தும் வியூகத்தின் ஒரு பகுதியே என்கின்றனர் அரசியல் விவரமறிந்தவர்கள்.
புதிய இயக்கம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அரசியல் பயிற்சி அளிப்பது, விஜய் ரசிகர் மன்றங்கள் போன்ற மாதிரியில் அண்ணாமலையின் சமூக ஊடக பின்தொடர்பாளர்களையும் வாலண்டியர்களையும் பூத் அளவில் கேடர்களாக மாற்றுவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த டீசன்ட்ரலைஸ்டு மாடல் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி, புதிய பிராந்திய இளைஞர் இயக்கத்தைத் தொடங்குவது இதுவே முதல் முறையாகும். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, அண்ணாமலையின் 'மக்கள் சக்தி இயக்கம்' 2026க்குப் பிந்தைய தமிழ்நாட்டு அரசியல் சமன்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிப்பிடுகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக