நெல் கொண்டு வந்த விவசாயி… நஷ்டம் கொண்டு வீடு திரும்பும் அவலம்!” “எடை போட 20 நாள்… ஆனால் வசூலுக்கு ஒரு நிமிஷமா?”
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கடும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தினமும் நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து, ஒரு நெல் மூட்டைக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை அதிகாரிகள் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே விளைச்சல் நஷ்டம் மற்றும் விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூடுதல் வசூல் விவசாயிகளை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், நெல் எடை போடும் பணிகளில் கடும் தாமதம் நிலவுவதால், விவசாயிகள் 20 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
மழைக்காலத்தில் பாதுகாப்பான சேமிப்பு வசதி இல்லாததால், மழையில் நனைந்து நெல் முளைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர்.
“விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, பணம் வசூலித்து வேதனைப்படுத்துகின்றனர்” என குற்றம்சாட்டும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக