நத்தம் அருகே நடுவனூர் பகுதியில் வைக்கோல் ஏற்றிய டிராக்டரில் தீ விபத்து-நீண்ட நேரம் போராடி தீயணைத்த தீயணைப்புத் துறையினர்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சிவக்குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஷ் என்பவரது தோட்டத்திற்கு அலங்காநல்லூர் பகுதியிலிருந்து 50 வைக்கோல் பண்டல்களை டிராக்டர் மூலம் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். நடுவனூர் அருகிலுள்ள புதுக்குளம் என்ற இடத்தை அடைந்தபோது, டிராக்டரின் மேல் ஏற்றப்பட்டிருந்த உயரமான வைக்கோல் பண்டல்கள் மின்கம்பியை உரசியது. இதனால் திடீரென தீப்பொறி பறந்து, வைக்கோல் பண்டல்களுக்கு தீ பற்றிக் கொண்டது.வைக்கோல் முழுவதும் வேகமாக எரியத் தொடங்கியதால், டிராக்டர் முழுவதும் தீயின் பிடியில் சிக்கியது. சிவக்குமார் உடனடியாக டிராக்டரை நிறுத்தி, பாதுகாப்பாக இறங்கினார். ஆனால், தீ மேலும் மேலும் பரவி, 50 வைக்கோல் பண்டல்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், நத்தம் தீயணைப்பு நிலைய அதிகாரி அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் அரை மணி நேரம் தொடர்ச்சியாக போராடி, தீயை முழுமையாக அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் உடனடி மற்றும் திறமையான செயல்பாட்டால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், 50 வைக்கோல் பண்டல்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது. டிராக்டரும் சேதமடைந்தது. தீ ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மின்கம்பி உயரம் போதுமானதாக இல்லாதது இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக