அறந்தாங்கி அரசு கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கான விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை தாங்கி, போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
ஓட்டம், வட்டெறிதல், சதுரங்கம், கேரம், கபடி, கிரிக்கெட், கைப்பந்து, இறகுப்பந்து, கோ கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா பிற்பகலில் கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். த.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பரிசுகள்,பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.அவர் தமது சிறப்புரையில், " திருவள்ளுவர் உடலை உயிரை தெய்வமென்றே போற்றுகின்றார்.உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பார் திருமூலர். விளையாட்டு பல்வேறு வளங்களையும் சிறப்புகளையும் தரும். மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.தன்னம்பிக்கை உங்கள் வெற்றிக்கான முதல்படி.தன்னம்பிக்கையுடன் செயற்பட இளமை வேண்டும். நல்ல இளமையைத் தருவது விளையாட்டு.அந்த விளையாட்டில் முழுக்கவனம் செலுத்துங்கள்.வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் " என்று பேசினார்.
தடகளப்போட்டிகளில்ஆடவர் பிரிவில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவித்த கணினி அறிவியல் துறை மாணவன் அருண், மகளிர் பிரிவில் கணிதவியல் துறை மாணவி ஜெயந்தி ஆகியோருக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளும், ஒட்டுமொத்த விளையாட்டுப்போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவித்த கணிதவியல் துறை மாணவ, மாணவியருக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.
விழாவில் கல்லூரித்துறைத் தலைவர்கள் முனைவர் கா.காளிதாஸ், முனைவர் கு.சீனிவாசன், முனைவர் மு. அன்பழகன், முனைவர் பா.கிளாடிஸ், முனைவர் ஏ.டேவிட்கலைமணிராஜ், சு.சிற்றரசு, முனைவர் ரா.பிரகதாம்பாள் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாகக் கல்லூரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளரும்,ஆங்கிலத்துறை விரிவுரையாளருமான உ.பூபதிராஜ் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ந.ஜீவரத்தினம் நன்றி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை தொகுத்து வழங்கினார்.
போட்டிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் மணிகண்டன், காமேஷ், கமலேஷ், அருண்,காயத்ரி, காவிகா,பவித்ரா, கெளசல்யா, ஜெகதீஸ்வரி,துர்க்கா, தேன்மொழி, பிரியா, முத்துலெட்சுமி, அபிநயா ,மகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.





கருத்துகள்
கருத்துரையிடுக