புதுக்கோட்டையில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம்,நாகரீகமாக உடை அணிந்துதார்சு வீடுகளில் வசித்து வரும் உங்களுக்கு குருவிக்காரர் இனம் என சாதிச் சான்றிதழ் தர முடியாது எனக் கூறி சென்ற அரசு அதிகாரிகளால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் திமுகவின் அரசு அதிகாரிகளை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் குதித்துள்ள கிராம மக்களின் செயலால் பரபரப்பு..
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா செட்டிகாடு கிராமத்தில் உள்ளது குருவிக்காரன் குடியிருப்பு. இந்தக் குடியிருப்பில் சுமார் 20-கும் மேற்பட்ட குருவிக்கார இனத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அவ்வாறு வசித்து வரும் மக்களுக்கு கடந்த சில வருடங்களாக குருவிக்காரர் இனம் என சாதி சான்றிதழ் வழங்காமல் திமுக அரசு அதிகாரிகள் அலைக்கழித்து வந்துள்ளனர்.இதனை பெற வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்த நிலையில் அரசு அதிகாரிகள் கண்துடைப்பிற்காக அவர்களை நேரில் சந்தித்து நீங்கள் அனைவரும் தார்சு வீடுகளில் வசித்து வருவதாகவும்,மிகவும் நாகரிகமாக வாழ்வதாகவும் கூறியவர்கள் நீங்கள் அனைவரும் இனத்திற்கான சான்றை பெற முடியாது என கூறியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு குருவிக்காரர் இனம் என சாதி சான்றிதழ் வழங்காததால் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை கண்டித்தும் தற்பொழுது நடக்க இருக்கும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பிளக்ஸ் பேனர் வைத்து சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாறிவரும் நவ நாகரீக உலகத்தில் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பேசி வரும் திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்த குருவிக்கார இன மக்கள் நாகரிகமாக உடையணிந்தும்,தார்சு வீடுகளில் வசித்து வருவதால் அவர்களின் சாதி அடையாளமான குருவிகாரர்கள் என சான்றிதழ் வழங்க அரசு அதிகாரிகள் முன்வராத செயலை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பிளக்ஸ் வைத்து,வீட்டில் கருப்பு கொடி கட்டியுள்ள சம்பவம் அறந்தாங்கி மற்றும் அதன் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக