இடியுடன் கூடிய மழையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!!
விழுப்புரம் மாவட்டம்,உலகப் புகழ் பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசை நாளான இன்று மேல்மலையனூர் அங்காளம்மன் சேஷ சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின் பல வண்ண மலர்கள் பட்டாடை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
அதன் பின் புளியோதரை சக்கரை பொங்கல் பலவகையான பழங்கள் கொண்டு நெய்வேத்தியம் செய்யப்பட்ட பின் தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உற்சவர் அங்காளம்மன் சேஷ சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இரவு 11 மணியளவில் பூசாரிகள் வழக்கப்படி தங்கள் தோள்களில் உற்சவர் அங்காளம்மனை சுமந்து வந்து ஊஞ்சல் உற்சவத்திற்கு என பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் ஊஞ்சலில் ஆட்டுவித்து தங்கள் வழக்கப்படி தாலாட்டு பாடல்கள் பாடி நெய்வேத்தியம் தீபாரதனை எடுத்து அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
எதிர்பாரா விதமாக இடியுடன் கூடிய மழையில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பங்குனி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மழையையும் பொருட்படுத்தாது நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா என்ற கோஷத்துடன் அங்காளம்மனை வழிபட்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த ஊஞ்சல் உற்சவத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக