அதிமுக தேர்தல் வாக்குறுதி 2026: பத்திரிகையாளர் நலனுக்காக அதிரடித் திட்டங்கள் அறிவிப்பு!!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடைக்கோடியில் பணியாற்றும் நிருபர்களுக்கும் அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையில் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய வாக்குறுதிகள் இதோ:
அனைத்து நிருபர்களுக்கும் அங்கீகாரம்:
மாநில அளவில் மட்டுமின்றி, தாலுகா அளவில் பணியாற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும் பாகுபாடின்றி அரசு அங்கீகார அட்டை, மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டியில்லா வீட்டுக் கடன்:
சொந்தமாக வீடு கட்ட விரும்பும் பத்திரிகையாளர்களுக்கு (அங்கீகாரம் உள்ளவர் மற்றும் இல்லாதவர் என இரு தரப்பினருக்கும்), கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 10 லட்சம் வரை முழுமையான வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்கப்படும்.
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்:
பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை இருந்து வந்த வருமான உச்சவரம்பு இனி நீக்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து மூத்த பத்திரிகையாளர்களும் எவ்விதத் தடையுமின்றி ஓய்வூதியம் பெற வழிவகை செய்யப்படும்.
இலவசக் குடியிருப்பு மனைகள்:
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்வதற்கு ஏதுவாக அரசு சார்பில் குடியிருப்பு மனைகள் (House Plots) வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
காட்சி ஊடகவியலாளர்களுக்கும் ஓய்வூதியம்:
இதுவரை அச்சு ஊடகப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் திட்டம், இனி வரும் காலங்களில் தொலைக்காட்சி மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அதிமுகவின் இந்த வாக்குறுதிகள் தமிழகம் முழுவதும் உள்ள ஊடகத் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, இணையதள நிருபர்கள் மற்றும் தாலுகா அளவிலான செய்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக