நத்தம் அருகே டாஸ்மாக் கடை சுவரை உடைத்து கொள்ளை முயற்சி!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடை புதன்கிழமை பின்னிரவு கொள்ளை முயற்சிக்கு ஆளானது. முகமூடி அணிந்த இருவர் கடையின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். போலீஸார் வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.
புதன்கிழமை வழக்கம்போல் விற்பனை முடிந்த பின்னர், கடையில் வசூலான ரூ.3.58 லட்சம் பணத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு ஊழியர்கள் கடையைப் பூட்டிச் சென்றனர். கடையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தன. கடையின் பாதுகாப்புப் பணியில் பண்ணுவார்பட்டியைச் சேர்ந்த காவலாளி ரங்கன் இருந்தார்.
நள்ளிரவில் சுவர் உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்த காவலாளி ரங்கன், முகமூடி அணிந்த இருவர் சுவரை உடைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களில் ஒருவரிடம் கத்தி இருந்ததால், தாக்குதல் நடக்கும் அச்சத்தில் நேரடியாக எதிர்கொள்ளாமல், கடை விற்பனையாளர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் நத்தம் போலீஸார் உடனடியாகச் செயல்பட்டனர். இரவு ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர் ராபர்ட் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸார் வந்ததை உணர்ந்த கொள்ளையர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த மதுபானக் கடை மேற்பார்வையாளர் பூசாரி அழகன், விற்பனையாளர் ஆறுமுகம், உதவி விற்பனையாளர் ரவி ஆகியோர் கடையை ஆய்வு செய்தனர்.
போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.3.58 லட்சம் பணமும், ரூ.35 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும் கொள்ளையிலிருந்து தப்பின.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக