அரிமளம் அருகே அய்யனார் கோயில் பாலாலய விழா தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோயில் வாசலில் திரண்டதால் பரபரப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள புதுநிலைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கண்ணுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயில் திருப்பணிக்காக பாலாலய விழா நடைபெற்றது. விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட கோயில் ஒரு தரப்பினர் கலந்து கொண்டனர். அதேசமயம் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்ததோடு பாலாலய விழாவை புறக்கணித்து கோயில் சம்பந்தப்பட்ட கிராமத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோயில் நுழைவாயில் பகுதியில் திரண்டு இருந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை எழும் என எண்ணி முன்கூட்டியே சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து கோயில் பாலாலய விழா புறக்கணிப்பு செய்த மக்களிடம் கேட்டபோது தெரிவித்ததாவது:
இதற்கு முன்னர் கண்ணுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகங்கள் புதுநிலைப்பட்டி கிராமத்தினரால் ஆலய புனரமைப்பு செய்து நடத்தப்பட்டது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில வருடங்களாக அறநிலையத்துறை கண்ணுடைய அய்யனார் கோயிலை கையகப்படுத்தி பராமரித்து வருகிறது. அதோடு கோயிலில் எங்கள் அனுமதி இல்லாமல் உண்டியல் வைக்கப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட கோயில் கிராமத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. இதனிடையே அறநிலையத்துறை தற்போது கோயில் கும்பாபிஷேகம் நடத்த பாலாலய விழாவில் ஈடுபட்டுள்ளது. இதில் புதுநிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரும் பகுதியினர் கலந்து கொள்ள வில்லை. இருந்தபோதிலும் சிலர் தூண்டுதலின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் பாலாலய விழாவை தன்னிச்சையாக நடத்துகின்றனர் என தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாக முறையான முடிவு எடுக்க விட்டால் வரப்போகும் தேர்தலில் புறக்கணிப்போம் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம் செய்வோம் என்றும் தெரிவித்தனர் மேலும் கோயில் நுழைவாய் பகுதியில் கோயில் பாலாலய விழா புறக்கணித்த சம்பந்தப்பட்ட கிராமத்தினர் பரவசமடைந்து சாமியாடியது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக