நத்தத்தில் பொங்கல் பானை அனுப்பும் பணி மும்முரம்!!
திண்டுக்கல் மாவட்டம்,தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகேயுள்ள பாறைப்பட்டியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இங்கு கால், அரை, ஒரு படி, இரண்டு படி என பல்வேறு அளவுகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இத்தொழிலாளர்கள் தயாரிக்கும் பானைகள் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பழனி, உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக உள்ளனர்.
இது குறித்து பானை தயாரிக்கும் தொழிலாளி கார்த்திக் கூறியதாவது :
நவீன நாகரிக காலகட்டத்தில் மக்கள் மண்பானைகளைத் தவிர்த்து, குக்கர், வெள்ளி, பித்தளை போன்ற பாத்திரங்களில் பொங்கல் வைக்கத் தொடங்கியுள்ளதால், இத்தொழில் நலிவடைந்து வருகிறது. முன்பு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 7-8 குடும்பங்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வருங்கால சந்ததியினரும் இந்த பாரம்பரிய மண்பாண்டத் தொழிலைத் தொடர வேண்டும் என்பதற்காக, பொங்கல் பரிசுத் தொகுப்பில் (பச்சரிசி, வெல்லம், கரும்பு போன்றவற்றுடன்) மண்பானை மற்றும் மண் அடுப்புகளையும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது நான்கு தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் மண்பாண்டத் தொழிலை ஊக்குவிப்பதுடன், அழிவின் விளிம்பில் உள்ள இத்தொழிலை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.



கருத்துகள்
கருத்துரையிடுக