நத்தம் வந்தடைந்த 420 வருட பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவடி மடத்துக்கு நேற்று அதிகாலை 420 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க நகரத்தார் 352 காவடிகள் வந்து சேர்ந்தன.சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கட்கிழயமை குன்றக்குடியில் இருந்து 21 நாட்கள் பயணமாக புறப்பட்டு நத்தம் வழியாக பழனியை நோக்கி பயணத்தை மேற்கொள்கின்றனர்
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 420 ஆண்டுகளாக இந்த சர்க்கரை காவடிகளை 21 நாட்கள் பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை தரிசித்து காவடி செலுத்தி தங்கள் நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 1 தை பூசத்தைினத்தன்று பழனி சென்றடைந்து அதன் பின் பிப்ரவரி 3 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்கிறார்கள்.
அதன் பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு. தங்களது முன்னோர்கள் சென்று வந்த பாதையிலேயே இவர்கள் இன்றளவும் கடைபிடித்து சென்று வருவது மாற்றமுடியாத வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.அதனடிப்படையில் நத்தம் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள காவடி மடத்திற்கு காவடிகள் வந்தடைந்தது பின்னர் அதிகாலை மகேஸ்வர பூஜை நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கி புறப்பட்டார்கள்.நத்தம் மாரியம்மன் கோவிலில் இருந்து கிளம்பிய காவடிக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சர்க்கரை காவடியுடன் புறப்பட்ட இந்த மக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பழனியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும்.மாறி வரும் கால சூழ்நிலையில் கூட தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்றும் மாறாது தங்களது பயணங்களை வைத்திருப்பது இவர்களின் தனிச்சிறப்பு. இருந்தும் இல்லாததை போல் மேல் சட்டை அணியாமல் ஆண்டியாக கிடைத்த இடத்தில் சாப்பிட்டு ரோடு ஓரங்களில் படுத்து தங்கள் பாரம்பரியத்தை சிறப்பை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.




கருத்துகள்
கருத்துரையிடுக