ஜபலபூர்–ராய்பூர் கிறிஸ்துமஸ் விழாக்களில் தாக்குதல் – முஸ்லிம் மக்கள் கழகம் கடும் கண்டனம்!!
விழுப்புரம் மாவட்டம்,ஜபலபூர், ராய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களுக்கு, முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவன தலைவர் டாக்டர். ச.சு. ஜைனுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்துவ மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்த பகுதிகளில், பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள் நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சில மதவாத கும்பல்கள் மேற்கொள்ளும் இத்தகைய அசம்பாவிதங்கள், ஜனநாயக குரலை நெறிக்கும் செயல் போல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்களது வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக செயல்படுத்த முழு உரிமை உள்ள நிலையில், மதவாத சக்திகள் ஏற்படுத்தும் இடையூறுகள் தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாகவும், இது மத்திய அரசுக்கு பெரும் அவமானத்தை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக