கடலூரில் நடைபெற்ற “முடிவிலி” ஓவியக்கண்காட்சி மற்றும் கோட்டோவியங்களில் கடலூர் – நூல் வெளியீடு!!
கடலூர் மாவட்டம்,ஏ.ஆர். பெயிண்டிங் ஸ்டுடியோ மற்றும் ஆக்கம் ஆர்ட் ஃபவுன்டேஷன் இணைந்து வழங்கும் நான்காவது “முடிவிலி” ஓவியக் கண்காட்சி, கடலூர் பாரதி சாலை, ஸ்ரீவள்ளிவிலாஸ் ரெசிடென்சியில் நேற்று தொடங்கியது.
இக்கண்காட்சியை கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில் குமார் IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆக்கம் ஆர்ட் ஃபவுன்டேஷன் நிறுவனர் மற்றும் ஓவியர் ரா. ராஜசேகர் அவர்களால் வரையப்பட்ட “கோட்டோவியங்களில் கடலூர்” என்ற நூலை வெளியிட்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, கடலூரில் நிரந்தர ஓவியக் காட்சியகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களின் கலைநயத்தை ரசித்துப் பாராட்டினார்.
கடலூர் ஸ்ரீவள்ளிவிலாஸ் உரிமையாளர். ச. ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது துணைவியார். இந்துமதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்தக் கண்காட்சி டிசம்பர் 26 மாலை 6 மணிக்கு தொடங்கியதுடன், ஜனவரி 05, 2026 வரை மொத்தம் 11 நாட்கள் கலை, சிந்தனை மற்றும் சமூக உணர்வுகள் ஒன்றிணையும் ஓவியப் பயணமாக நடைபெறுகிறது.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியர்கள் மற்றும் தலைப்புகள்:
இமயவர்மன் – குழந்தைகள் குறும்பு டாக்டர். இளந்திரையன் (அறுவைச் சிகிச்சை நிபுணர்) – எக்ஸ்ரேவில் ஓவிய பார்வை!
டாக்டர் ஜெயபாரதி – குழந்தைகளின் சந்தோஷம்!
அருளி (பாரதியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி) – முக்கிய ஆறுகள்.
ஹன்ஷிகா நடேசன் (9-ம் வகுப்பு) – மழைக்காலம்
கோமதி – நடந்த பாதைகள்
கோபிநாத் (விழுப்புரம், பொறியியல் பட்டதாரி) – குடும்ப நிகழ்வுகள்
கண்ணன் (ஓவிய பட்டதாரி) – விவசாயிகள் காட்சிகள்
கனகராஜ் (பாரதியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி) – அழிந்து வரும் பட்டாம்பூச்சிகள்
அக்ஷயா ஸ்ரீ (10-ம் வகுப்பு) – புத்தர் ஓவியங்கள்
பிரியலதா (ரெவின்யூ துறை) – இயற்கை காட்சிகள்
ஸ்ரீபூஜா (10-ம் வகுப்பு) – சாமி ஓவியங்கள்
சாராள் – கடல்வாழ் உயிரினங்கள்
சவிதா கிருஷ்ணகுமார் (இல்லத்தரசி) – நம்பிக்கை ஓவியங்கள்
ஜீவானந்தம் – பாரம்பரிய வீடு
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஓவியங்களும் விற்பனைக்காக விலையுடன் வைக்கப்பட்டுள்ளன. ஓவியர்களே நேரில் இருந்து தங்கள் படைப்புகளின் கருத்து மற்றும் கலைநயத்தை விளக்கமளித்தனர்.
ஓவியர்களின் திறமை வளர , கலை வளர்ச்சியை நேசிக்கும் நல்ல மனம் கொண்டவர்களிடம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக