சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் 15 நாள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டியில் அமைந்துள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கான 15 நாள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமின் நிறைவு விழா இன்று டிச 19 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் கடந்த 15 நாட்களாக இந்தப் பயிற்சி முகாம் கல்லுரி வளாகத்தில் நடைபெற்றது. பெங்களூருவைச் சேர்ந்த ‘அகேடர்ஸ்’ நிறுவனம் இப்பயிற்சியை வழங்கியது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ருத்ரேஷ், துணை இயக்குநர் அகில் மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவர் ரகுராம் ஆகியோர் கலந்துகொண்டு, நவீன காலத்திற்குத் தேவையான ஜாவா மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவான பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி முகாமில் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் , மின்னியல் மற்றும் மின்னணுவியல் , மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நிறைவு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஆண்டோ அலோசியஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அகேடர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ருத்ரேஷ், பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இப்பயிற்சி முகாமில் சிறப்பான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியை தேவி நன்றியுரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் பி.ஆர் அசோக்



கருத்துகள்
கருத்துரையிடுக