பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா–ஜியோ சார்பில் ராணிப்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,போட்டா–ஜியோ (அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு) சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.மோகன்ராஜ், வைத்தியநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிதி காப்பாளர்கள் ஆனந்தன், மோகனரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர். வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வாழ்த்துரை:
ஆனந்தன், பஞ்சாட்சரம், சுரேஷ்பாபு, விஜயலட்சுமி, வாசவி, ரவி, ராமச்சந்திரன், வெங்கடாசலம், சுரேஷ்குமார், ஏஜாஸ் அகமது, தல்வி, மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டா–ஜியோ மாநில பொதுச் செயலாளர் சரவணன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் எம்.உமாசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
2009ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, அவர்களுக்கு உரிய ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் எனக் கோரினர்.
தமிழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு 7, 14, 20 ஆண்டுகள் பணி நிறைவு அடிப்படையில், மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குநர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணிக்காலத்தை பணிவரன் முறைப்படுத்தி, அதற்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் சீனிவாசன் நன்றி கூறினார்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.


கருத்துகள்
கருத்துரையிடுக