நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம், ஒன்றிய குழுத் தலைவர்.பெ. வடிவேலு அவர்கள்தலைமையில்நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த 3-ம் தேதி, இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் 296 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், முடிவுற்ற பணிகளை திறப்பு விழா செய்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சிறப்புரையாற்றினார்.

இந்த மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களுக்கும் நெமிலி ஒன்றிய குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய திட்டமான, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்கும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரு பிரதிநிதி வீதம் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் நியமன முறை மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும், என்ற அரசாணையின் அடிப்படையில், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் நெமிலி ஒன்றிய குழு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளிடம் விருப்பம் மணுக்கள் பெறப்பட்டு அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு, செல்வி.உமா (100% ஊனம் கொண்டவர்) த/பெ பழனி என்பவரை நியமன ஒன்றிய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழை நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் நேற்று நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் வழங்கினார். 

மேலும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் பேசுகையில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நாட்டிலேயே நம்முடைய மாநிலத்தை முதன்மையான மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். உதாரணத்திற்கு 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அரசின் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டம், அதேபோன்று தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதந்தோறும் அரை.2000/- நிதி உதவி வழங்குகின்ற அன்புக்கரங்கள் திட்டம், மகளிர் விடியல் பயணத்திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், குழந்தைகளின் பசிப்பிணிப் போக்கும் காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார் முதலமைச்சர்.”

அதேபோன்று, தமிழ்நாட்டிலேயே உள்ள மாவட்டங்களில் நம்முடைய இராணிப்பேட்டை மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக உருவாக்கும் நோக்கத்தில் நம்முடைய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.  ஆர்.காந்தி அவர்கள், அல்லும் பகலுமாக அயராது பாடுபட்டு வருகிறார்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் நம்முடைய பகுதிகளில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேல் முடிக்கப்படாமல் இருந்த பல்வேறு திட்டங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார்.. உதாரணத்திற்கு சயனபுரம் ஆதிதிராவிடர் பகுதியிலும், கணபதிபுரம் ஆதிதிராவிடர் பகுதி, சிறுணமல்லி ஆதிதிராவிடர் பகுதி, நெல்வாய் கிராம்ம் ஆகிய இடங்களில் பகுதிநேர நியாய விலை கடைகளை திறந்து வைத்திருக்கிறோம். ஓச்சேரி முதல் அரக்கோணம் வரை செல்லும் சாலையில் நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட  கல்லாறு பகுதியில் தரைப்பாலம் பழுதடைந்து நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. அதனை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசு அமைந்த உடன், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி கட்டி முடிக்கப்பட்டு, சமீபத்தில் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர். எ.வ.வேலு மற்றும் அமைச்சர்.ஆர். காந்தி ஆகியோர் திருக்கரங்களால் திறந்து வைத்தனர். இது போன்று பல்வேறு திட்டங்களை நம்முடைய பகுதியில் செயல்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாண்புமிகு கைத்தறி அமைச்சர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று வருகின்ற மழைக்காலங்களில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள், நியாய விலை கடைகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள் போன்ற பல்வேறு அரசு கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளனவா? அல்லது பழுதடைந்து இருக்கின்றனவா? எந்த கட்டிடங்களை பழுது நீக்கம் செய்யப்பட வேண்டும், எந்த கட்டிடங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்று ஆய்வு செய்து, அந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி, அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனைத்து உள்ளாட்சிப் பிரதிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மழைக்காலங்களில் குளங்கள், ஏரிகள், ஆகியன நிரம்பி அவற்றில் ஏதும் சேதம் ஏற்படாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடித்தும், புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க கோரியம், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்.ஜெயஸ்ரீ, ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பிற துறையை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!