கரூரில் 1800 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை!!
கரூர் மாவட்டம்,அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். கா. காளிதாஸ், அறிவொளி ஆசிரியர். செல்வராஜ், வரலாற்று ஆய்வாளர். அ.ஜியாவுதீன் ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழுவினர் ஆவுடையார் கோவில் தாலுக்கா கரூரில் ஆய்வு செய்த பொழுது, மிழலைக் கூற்றத்துக் கரூர் மாகாணம் அருள்மிகு நாச்சியார் அம்மன் கோவிலில் புத்தர் சிலை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். இது பற்றி வரலாற்றுத் தொல்லியல் ஆய்வாளர். காளிதாஸ் கூறியதாவது, புத்தர் சிலையானது இந்திய குப்தர் மரபுக்கே உரிய மிகப் பழமையான அமைப்புடன் கூடிய சிலையாகும். இச்சிலையின் காலம் கி.பி 100 லிருந்து கி.பி 300 வரையினதாக1800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். அமர்ந்த நிலையில் உள்ள இப் புத்தர் சிலை இலங்கை, அனுராதபுரம், மக மெவுனா பூங்கா, பூவரசங்குளம் , அபயகிரி விகாரை போன்ற இடங்களில் உள்ள புத்தர் சிலை கலை வடிவங்களுடன் ஒப்பிடலாம். மிகவும் உயரம் குறைந்த நிலையில் கழுத்தும் சற்று கொழுத்த முகவடிவமும், வட்ட வடிவத்தோள்கள், மெல்லிய இடுப்புப்பகுதி, குறுகிய அளவு குடுமி, மடிப்புகளற்ற மிக மெல்லிய மடிப்புக் கொண்ட காவியுடை, சிலையின் பின்புலத்தில் அலங்கரிப்புகள் இல்லாத அடக்கத் தன்மை, இருபுறமும் யானைத் துதிக்கை இணைந்த சடல், பணிப்பெண்கள் இல்லாத நிலை, தரு, போதி மரம் இல்லாத அமர்ந்த கோலம், காதில் அணிகலன் இல்லாத புத்தர் முகத்தில் சாத்வீக வெளிப்பாடும், அட்டாங்க யோக நிலையில் பத்மாசனமிட்டுத் தியானத்தில் அமர்ந்துள்ளார். பொன் பற்றி, அடம்பூர், கோதைமங்கலம், கதிராமங்கலம், பட்டமங்கலம், எழுநூற்று மங்கலம் போன்ற இப்பகுதிகளில் புத்த சமயம் எழுச்சி மிகுந்து இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இப்புத்தர் சிலைக்கு அன்றாட வழிபாடுகளை கரூர் கண்ணன் அவர்கள் செய்து வருகிறார் என்றார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக