ஏலங்கம் கிராமத்தில் 9 ம் நூற்றாண்டு பொக்கிஷ சிலைகள்!!
அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவரும் தொல்லியல்வரலாற்றுக் கல்வெட்டு ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் கா. காளிதாஸ், மாமன்னர்கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் அ. சந்திர போஸ், அறிவியல் இயக்க ஆசிரியர் செல்வராஜ், அ.ஜியாவுதீன், ஆ.நவீன் குமார் ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர், ஆவுடையார் கோயில் தாலுக்கா சித்தரம்பூர் இரும்பாநாடு,ஏனங்கம் பகுதிகளை நேரில் சென்று மேற்பரப்புக் களாய்வு செய்தனர்.
கள ஆய்வில் ஏலங்கம் கிராமத்தில் சிவன் கோயில் ஒன்று சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர். இரட்டைச் சிவலிங்கம் , இரட்டை நந்தி; தட்சிணாமூர்த்தி; விநாயகர் போன்ற தெய்வச்சிலைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். ஊர்ப் பொதுமக்கள் இக் கோயிலில் உள்ள கற்களை எடுத்து அருகில் அடுக்கி வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.
சிவன் கோயில் பற்றி வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது, கோயில் கல்வெட்டில் "
ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ கோச்சடைய பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் புனற்ச்சடைப் பொன்பற்றப் புலியூரில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் கொண்டருளிய வீரபாண்டிய தேவருக்கு யாண்டு யரு(15) வது சிம்ஹ ஞாயற்று பூர்வ பட்சத்தில் திருநாள் அன்று மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று மீபாம்பாற்று ஏனங்களூர் என்று வருவதாலும், திருக்கோயில் ஸ்ரீ வீரபாண்டியனால்கி.பி 961 -ல் கட்டப்பட்டதாகும் எனலாம். இம்மாதிரியான வரலாற்று பொக்கிஷங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் உரிய கடமையாகும் என்றார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக