நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கல்!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் - 2025-26ம் நிதி ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. அதன்படி நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படுகிறது. அதன்படி நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 369 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. வீடு ஒதுக்கீடு ஆணை பெற்ற பயனாளிகள் விரைந்து வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா, திட்ட இயக்குனர். ஜெயசுதா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, பிடிஓக்கள் ஜெயஸ்ரீ, சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள். ரவீந்திரன், எஸ்.ஜி.சி பெருமாள், மணிவண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்
கருத்துரையிடுக